Monday, February 12, 2007

இன்றைய தமிழ் சினிமா

தமிழ் சினிமா, என்பது ஒரு பொழுதுபோக்கு வழிமுறையில் ஒன்றுதான் என்றாலும், இப்போதைய தமிழ் சினிமாவின் நிலைமை, ரொம்ப வருந்தத்தக்கதாகத்தான் இருக்கிறது. இந்த நிலைமை இப்படியே போனால், எல்லோரும் திருட்டு விசிடியிலேயே இந்தப் படங்களைப் பார்த்துக்கொள்ளலாம், தவறொன்ரும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
சனி, ஞாயிறு, இரு நாட்களும், தீபாவளி, பொறி, என்ற இரு, திரைப்படங்களயும், 80ரூபாய் செலவழித்து, பார்க்கவேண்டியதாகிவிட்டது. திரை விமர்சனம் வரும் முன்னறேயே, பார்க்கவேண்டும் என்று ஒரு எண்ணம்.


தமிழ் சினிமா இயக்குனர்கள், நிஜமாகவே, மக்களை, இப்படி, கொடுமைப் படுத்தவேண்டாம்.

பொறி : நல்ல கதைக் களம். நாயகனின் அப்பா, நிலம் வாங்கும் விவகாரத்தில் ஏமாந்து விடுகிறார். நாயகன், எப்படி, அதனைக்கண்டுபிடித்து, மக்களுக்கு, எடுத்துச் சொல்கிறார், என்பதுதான், கதையின் கரு. இக்கருவை, எப்படியெல்லாம் கெடுக்கலாமோ, அப்படியெல்லாம், கெடுத்து இருக்கிறார், இயக்குனர். இந்த, சமூக பிரச்சினையைக் காண்பிக்க, மன்மத ராசா ஸ்டைலில் பாடல் எதற்கு? அனாவசியமான, இழுவையான சண்டைக்காட்சிகள் எதற்கு?சிரிப்பு என்ற பெயரில் சீப்பான , மனதிலேயே ஒட்டாத காமெடிக் காட்சிகள் எதற்கு?வியாபாரிகள் சங்கம் ஆரம்பிக்க, ஜிகினாஸ்ரீ போன்றோரின் , பாடல்களை வைத்து, நம்மையெல்லாம், ஏன் இப்படி முட்டாளாக்குகிறார், இந்த இயக்குனர்.

அடுத்து தீபாவளி: மூன்றாம் பிறை போல , அழகிய கவிதையைப் படைத்த தமிழ் சினிமா, இப்படி ஒரு இழி நிலைக்குச் செல்ல வேண்டாம். நாயகன், என்ன வேலை செய்கிறான். ஒழுக்கமானவனா, என்றெல்லாம், இயக்குனருக்கு, கவலையே, இல்லை. நாயகி, பல முறை, அய்யோ பாவமாக முழிக்கிறார். அவர் பாவனா அல்ல, பாவமா!!!. வில்லனோ, வேறு வேலையே, இல்லாதது, போல், எப்போதும், கொலை செய்கிறார். அல்லது, ஒரு ரூமில் அடைந்து, கிடந்து, தூங்குகிறார். வில்லனைப் பார்த்தால் ரொம்ப பாவமாய் இருக்கிறது. நாயகனோ, நாயகி கிடைப்பதைத் தவிர வேறொன்றும், பெரியதாக நினைப்பதாகத் தெரியவில்லை. குரல் வளம் வேறு, எம்.ஜி.ஆரையே நினைவுப் படுத்துகிறது. பல இடங்களில் அவர் பேசுவது அவருக்கே புரிகிறதா என்று தெரியவில்லை.

இப்போது வரும், தமிழ் படங்கள் ஒரு பார்முலாவிலேயே, எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
1) ஆரம்பக் காட்சியில், கட்டாயம், ஒரு குத்துப்பாட்டு இருந்தாகவேண்டும்.
2) அடுத்தக்கட்டத்தில் நாயகன், நாயகியை ஏதாவது ஒரு வழியில், துரத்தி துரத்திக் காதலிக்க வேண்டும்.
3) அடுத்தக்கட்டத்தில் ஏதோ ஒரு பிரச்சினையில் நாயகன் மாட்டித்தவிக்க வேண்டும். இதிலிருந்து விடுபட, நாயகன், ஒரு பெரிய சைசு( நாயகனை விட)பெண்ணுடன் அசிங்கமான அங்க அசைவுகளோடு ஆட வேண்டும்.
4) அடுத்தக்கட்டத்தில் வில்லனை நாயகன் நேரில் பார்க்காமலேயே கைத்தொலைப்பேசியில் சவால் விட வேண்டும். இதற்கு, பல கேமராக்கள் மூலம் ஒரு ஸ்பெஷல் எபெக்ட் கொடுக்க வேண்டும். பின்னணி இசை காதைப் பிளக்க வேண்டும்.
5) காதலியுடன் சமரசமாகி, வெளி நாட்டில் காதலி தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, கண்களை விரித்து விரித்து காதலனைப் பார்த்து, இடையை நன்றாக தனியே ஆட்டி, காட்டி, ஆட வேண்டும்.
6) அடுத்தக்கட்டத்தில் காமெடி என்கிற பெயரில் ஒரு ஏமாளி நடிகர் இரட்டை அர்த்த வசனத்தில் பார்க்கும் மக்களை சங்கடத்த்தில் நெளிய வைக்க வேண்டும். அல்லது ஒரு கோமாளித்தனம் செய்து மற்றவர்களிடம் அடி வாங்க வேண்டும். அல்லது நாயகனைப் பாராட்டிக்க்கொண்டே இருக்க வேண்டும்.
7) நாயகனின் அப்பா அல்லது, காதலியை வில்லன், ஏதாவது நூதனமான முறையில் கொடுமைப் படுத்த வேண்டும்.
8) நாயகன், இம்முறை, வில்லனை நேரில் மிரட்டி, பெரிய, பெரிய சாக்கடை, அல்லது, சென்னையில் உள்ள குரும்பாலங்களில் ஓடி ஓடி, பிரண்டு, உருண்டு, சண்டை போட வேண்டும். உருட்டுக் கட்டை கொண்டு, எல்லோரையும் ஓங்கி , ஓங்கி அடிக்க வேண்டும். இதில், நாயகனின், தோழனாக இருந்த காமெடியன் அடி வாங்கி சாக அல்லது, ஒருபெரிய வசனம் பேசி தலை சாய்க்க வேண்டும்.
9) அடுத்து மன்மத ராசா ஸ்டைலில் மக்களை சாந்தப் படுத்த, ரத்த வெள்ளத்தப் பார்த்து அலுத்துப் போன மக்களை குஷிப் படுத்த காதலியுடன் அரை குறை ஆடையுடன் ஆட வேண்டும். 10) சட்டையில் ரத்தம் வழிய, ஒரு நீள வசனம் பேசி, மக்களை போர் அடிக்கச் செய்து, தான் செய்தது, அனைத்தும், இதற்க்குத்தான் என்று நாம் கொடுத்த 80 ரூபாய்க்கான நியாயத்தைக் கற்பிக்க வேண்டும்.

அய்யோ தமிழ் சினிமாவே!!! எங்கே போகிறாய்?

சவால் விடும் நாயகனையும், சும்மா வந்து போகிற அரை குறை அம்னீஷியா நாயகியையும், நல்லதே செய்து சாகிற அப்பாக்களையும், கெடுதல் செய்து, பிறகு திருந்தும் வில்லல்ன்களையும், கற்பிழக்கும் தங்கைகளையும், பார்த்து, பார்த்து மிகவும் வெந்து போகிறோம்.

தரமிக்க படங்களைக் கொடுத்து, தமிழை வாழ வையுங்கள்.

சமீபத்தின் தரமான தமிழ் சினிமா வரிசையில், சேரன் படங்களும், தங்கர் பச்சானின் சில படங்ககளும், மனிரத்னம், மற்றும் ஷங்கரின் சில படங்களும் அடக்கம் என்றே சொல்லலாம்.