Thursday, December 10, 2009

திருமண ரிசெப்ஷன்

இப்போதெல்லாம் திருமண ரிசெப்ஷன் என்று போகிறோம்.
நன்றாக வரவேற்கிறார்கள்.
போய் அமர்கிறோம்.
மாப்பிளை வந்து சேரில் அமர்கிறார்
மணப்பெண் வர நேரமாகிறது
மக்கள் சல சலவென பேச ஆரம்பிகிறார்கள்
மணப்பெண் வர ஏன் நேரமாகிறது? மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு.., இருப்பு கொள்ள முடியாது, ஒரே விசாரிப்பு...அதற்குள் ...
ஓஒ, பியூட்டி பார்லரிடமிருந்து வர நேரமகிரதாம் என்றார் பக்கத்திலிருந்தவர்..........
மணப்பெண் வந்து மாப்பிளையின் அருகில் உட்கார, மக்கள் கூட்டத்தின் இடையே ஒரே பரபரப்பு....
எல்லோரும், ஒரு லைனில் நிற்க, வேறு வழியில்லாமல், நாங்களும் நின்றோம்.
லைனில் நின்று, கல்யாணப் பரிசைk கொடுத்து விட்டு, வீடியோவிற்கு போஸ் கொடுத்து, நாடகத்தனமாக சிரித்து, நகர,
சாப்பிடும் இடத்த்தில் ஒரே அமளி துமளி....
ஓஓ, மக்க்களை சரியாக கூட சாப்பிட விடாமல், பின்னாடியே அவர்களை பார்த்துக்கொண்டிருக்கும் நிலைமை...சாப்பிட இடம் பிடிக்க வேண்டுமாம்...........
இது என்ன ரிசெப்ஷன் .......
பொருமையில்லா மக்கள்
அடங்கா கூட்டம்
சிறிய கூடம்...
டாடி மம்மி வீட்டில் இல்லே என்று இன்னிசை என்கிற பெயரில் , அலறும் பாடகர்கள்.........
அலுத்து விட்டது எனக்கு.........
உங்களுக்கும், இம்மாதிரி அனுபவம் உள்ளதா ?

Wednesday, December 9, 2009

ஒரு சின்ன நெருடல்...

அழகிய பூங்கா............
காலை நடை பயிற்சி ...........
அன்பான கணவன் தத்தி தத்தி நடக்க, ஆசையுடன் கைப்பிடித்த மனைவி உடனே வர......
கணவன் நடக்க மனைவி துணைக்கு.
அருகிலுருக்கும் திண்ணையில்
இருவரும் அவசரமாக அமர.. நானோ ஏனோ என பார்க்க...
எங்கிருந்தோ வந்தது ஒரு கைதொலைபேசி மனைவியின் கையில்..
இருவரும் மாற்றி மாற்றி கைத்தொலைபேசியில் யாரிடமோ உரையாடல்
என் நடை பயிற்சியின் ஒரு மணி நேர தருணம் முடிவிற்கு வர
கணவன் மனைவியிடம் , கைத்தொலைபேசி பத்திரம் , அப்புறம் குழந்தையிடம் பேச முடியாது என்று கூறுவது கேட்டது ..........
கைக்குழந்தையை மடியில் ஏந்தி, தூக்கி , கன்னத்தில் முத்தமிட்ட குழந்தை , இப்போது கைத்தொலைபேசியாக மாறியது ... காலத்தின் கோலம்.

Thursday, December 3, 2009

பனையோலை !!!


பசுமை கொஞ்சும் ஒரு கிராமத்தில் ஒரு குலசேகரன் என்கிற சேகரன் வாழ்ந்து வந்தான். அவன் சிறுமை பிராயத்தில் , தனது தாத்தாவுடன், அவர்களுக்கு சொந்தமான வயல் வெளியில் நடந்து போயிக்கொண்டிருந்தன். அப்ப்போது, அவனுக்கு ஓங்கி உயர்ந்த பனைமரம் அவர்கள் வயல் வெளியில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது, பல கேள்விகள் அவனுக்குள் வந்தது. தாத்தாவை பார்த்து கேட்டான். தாத்தா, இந்த பனைமரத்தால் என்ன பயன்? நமக்கு நிற்க ஒரு நிழல் கூட இல்லையே என்றான். உடனே, தாத்தா, என்னடா பொடியா? இப்படி கேட்டு விட்டே? என்று, பனைமரத்தின் அருமை பெருமைகளையெல்லாம் அளந்து கொண்டே சென்றார். சேகரன், நன்றாக உன்னிப்பாக பொறுமையாய் எல்லாவற்றையும் காதில் வாங்கி கொண்டான்.

நாட்கள் நகர்ந்தன. பருவ காலம் மாற, பனை மரமும், கொண்டாட்டமாய், எல்லோருக்கும், பதநீரை அள்ளிக் கொடுத்தது. அதிலும், அழகிய பனை மட்டையில் மக்கள் பதநீரை ஆசையாகப் பருகினர். பனைமரத்திற்கு ரொம்ப சந்தோஷம், தன்னால் மக்கள் பயன் பெறுவதைப் பார்த்து, குதுகலித்தது. காலம் மாற, நுங்கு குலைகளைக் கண்டு, மக்கள், ஆரவாரமாய், கூட்டம் கூட்டமாய் அமர்ந்தது நுங்குகளை சுவைக்க , திரும்பவும், பனைமரத்திற்கு சந்தோஷம். அதிலும், சங்கர் என்னும் சிறுவன், பதநீருக்குள், மெதுவான நுங்குகளைப் போட்டு நன்றாக சாப்பிட்டான்.

காலம் மாறியது. கார்த்திகையும் வந்தது. சேகரனின் அம்மா, அவனை, நல்ல இளங்குருத்து பனை ஓலை ஒன்று கொண்டு வரச் சொன்னதும், சிறுவன் எதற்கு என்று கேட்டான். கம கம வென்று ஓலை கொழுக்கட்டை செய்தான் என்றார் அம்மா. சிறுவன், ஓடி போய், பனையேறும் அண்ணாவை கேட்டு, அழகிய குருத்தோலையாக பார்த்து எடுத்தது வந்தான். அம்மாவும் ஆசையாக ஓலை கொழுக்கட்டை செய்ய, சேகரன் சுவைத்து சாப்பிட்டான்.

நாட்கள் உருண்டோடியது. சேகரன், வாலிபம் அடைந்தான். பனைமரத்தடியில் வாலிபர்கள் உண்ணும் பனங்கள்ளும் அவனை ஈர்த்தது.

வருடங்கள் கடந்தது. சேகரன் தக்க வயதில் மணமுடித்து, அந்த கிராமத்திற்கு, நாட்டாண்மை ஆகி விட்டான். சேகரனோடு சேர்ந்து, பனைமரத்திற்கும், வயதாகியது. முன்பு மாதிரி , அதற்கு மக்களுக்கு பயனளிக்க இயலவில்லை.

ஒரு நாள் பனையோலை ஒன்று, காய்ந்த காரணத்தால், கீழே விழ எத்தனித்தது. அப்போது, அது யோசித்தது. கீழே விழு முன் நாம், சேகரன் வீட்டு முற்றத்தில் விழுந்தால், நம்மை, கூரை வேயவாவது பயன் படுத்த மாட்டானா, என்று நப்பாசை வந்து விட்டது. மெதுவாக வீசிய, தென்றலை, பனையோலை, தன்னை கொண்டு போய் சேகரன் வீட்டு முற்றத்தில் சேர்க்குமாறு விண்ணப்பித்தது. காற்றும் பெரிய மனது வைத்து, சேகரன் வீட்டு முற்றத்தில் பனையோலையை சேர்த்தது. பனையோலைக்கு ரொம்ப குஷியாகப் போய் விட்டது. தன்னை எப்படியாவது இவர்களுக்கு பயன் பாடாகிக் கொள்ள வேண்டுமென துடித்தது.

பனையோலை, விழுவதைப் பார்த்த சேகரன், அடடா, நம் பனைமரம், காய ஆரம்பித்து, ஓலைகள் விழ ஆரம்பித்து விட்டது, என்று சொல்லிக் கொண்டே, மனைவியைப் பார்த்து இதை எதற்காகவாவது பயன் படுத்துகிறாயா என்று கேட்டார். அவருடைய அழகிய மனைவியோ? அட போங்க, இப்போதெல்லாம் காய்ந்த பனையோலையை யார் உபயோகிக்கிறார்கள். இப்போதெல்லாம் ஓடு அல்லது காரை வீடுகள் தாம் அதிகம். சரி, அடுப்பெரிக்கவாவது உபயோகிக்கலாமே? என்றார் சேகரன். ஐயோ, எந்த காலத்தில் இருக்கிறீர்கள் நீங்கள். இப்போதெல்லாம் எல்லாரும், காஸ் அடுப்பு தன் உபயோகிக்கிறார்கள், என்கிறாள் மனைவி. சரி, ஒரு கொழுக்கட்டையாகவது செய்யலாமென்றால், இது ஒரு காய்ந்த ஓலை, ஒன்றுக்கும் பயனில்லை, ஒரு காலத்தில் காய்ந்த பனை ஓலையில் கவிதை, ஜாதகம் என்றாவது எழுதி வைப்பார்கள். இப்போதுதான் பேப்பர் வந்து விட்டதே ! ஓரமாக போடுங்கள் ! எதற்கும் பயனில்லை........
தென்றலென வீசிய காற்று, சடாலென சூராவேளியாக மாற ஆரம்பித்தது. காற்றின் வேகத்தில், காற்றின் அனுமதி இல்லாமலே, பனையோலை பறக்க ஆரம்பித்தது. காற்று செல்லும் திசையெல்லாம் பறந்தது. தனது சொந்த உருவம் அழிந்தது. சுத்தமாக உரு மாறி , வெறும் இலையின் உருவக் கூட்டினை மட்டும் கொண்டு, காற்று, தானாக, தன் வேகத்தை குறைத்தவுடன் கடலிலே கலந்தது. கடல் மட்டும் என்ன? காய்ந்து போன பனையோலை தேவையா என்பது போல, திரும்ப திரும்ப கரையில் கொண்டு பனையோலையை சேர்த்துக் கொண்டே இருந்தது.

பனையோலை என்ன பாவம் செய்தது? நன்றாக பசேல் என்று இருந்த போது இருந்த போது இருந்த மதிப்பு, காய்ந்தவுடன் மதிப்பும் காய்ந்து விட்டது. பனையோலைக்கு இருக்கும் நிலைமை, நம்மில் பலருக்கு இன்று உண்டு.
மக்கள் பதநீர் அருந்துவதைய்ம், அதிலும் பச்சை பனை மட்டை ஓலையில் அருந்துவதையும், மிருதுவான நுங்குகளை சுவைப்பதையும், அதிலும், நுங்குகளை பதநீரில் மிதக்க விட்டு அருந்துவதையும், குருத்து ஓலை பண்டிகை கொண்டாடுவதையும், அக்குருத்து ஓலையில் கம கமக்கும் கொழுக்கட்டை செய்து உண்பதையும், போதை தரும் பனங்கள்ளை அருந்துவதையும் நிறுத்துவதே இல்லை.